“அடுத்தவர்களை அழகாக்கி பார்க்க வேண்டும்” என்கிற என்னுடைய எண்ணம்தான் என்னை இந்த அழகுக்கலை துறையில் அதிகம் ஆர்வம் காட்ட வைத்தது என்கிறார் “அடுப்பங்கரையில் அழகு” என்கிற கான்செப்டை கையிலெடுத்திருக்கும் சென்னையை சேர்ந்த நிர்மலா. அழகுக்கலையில் முறையான பயிற்சி பெற்ற இவர் அரோமா தெரபிஸ்ட் பயிற்சியையும் முடித்துள்ளார். கோயமுத்தூர், மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் ‘‘தபஸ் பியூட்டி கேர்” என்ற பெயரில் அழகு நிலையத்தை நடத்திய அனுபவங்கள் நிறைந்தவர். நம்மில் பலருக்கும் சென்சிடிவ் சருமம் என் கையில் கெமிக்கல் கலந்த காஸ்மெடிக்ஸ் பலருக்கும் ஒவ்வாமையை உண்டாக்கிவிடும். இதற்குத்தான் அழகுக்கலையில் 25 வருட அனுபவத்தை வைத்துள்ள நிர்மலா நம் சமையலறையில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து நம்மை எவ்வாறு அழகுபடுத்தி கொள்வது என நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
அழகுக்கலையில் ஆர்வம் வந்தது எப்படி?
நான் திருமணத்திற்கு முன்பே அழகுக்கலையிலும் அரோமோ தெரபியிலும் பயிற்சி பெற்றிருந்தேன். அதன்பிறகு ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்தேன். குழந்தை பிறந்த பிறகு பணிக்கு செல்ல இயலாத காரணத்தால் மறுபடியும் அழகுக்கலையை வீட்டிலிருந்தே தொடர்ந்தால் என்ன என்கிற எண்ணம் ஏற்பட்டது. அப்போது என் வீட்டிலேயே ஒரு அறையில் பார்லரை அமைத்து அழகுநிலையத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தேன். கணவரின் பணி மாற்றம் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளுக்கு செல்லவேண்டி இருந்ததால் அங்கெல்லாம் ஒரு பார்லரை நடத்தி வேறுயாருக்காவது கொடுத்து விட்டு வந்து விடுவேன். பல ஊர்களில் பார்லர் நடத்திய அனுபவம் எனக்கு தற்போது பெரிதும் கைகொடுத்து வருகிறது.
“அடுப்பங்கரையிலிருந்து அழகுக்கலை” ஐடியா எப்படி வந்தது?
நான் பார்லர் வைத்திருந்த சமயத்திலேயே எனது வாடிக்கையாளர்கள் என்னிடம் அழகுக்கலை சம்பந்தமான பல பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டு வருவார்கள். அவர்களுக்கு வசப்படும் எளிய பொருட்களை வைத்து அந்த அழகு சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் ஐடியாக்களை தந்து கொண்டிருந்தேன். அது என் வாடிக்கையாளர்களுக்கு என்மீது நிறைய நம்பிக்கைகளை தந்தது எனலாம். எப்போதும் கெமிக்கல்ஸ் சார்ந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துவதை விட நம் வீட்டு சமையலறையிலேயே உள்ள பல பொருட்கள் நம்மை அழகாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள கூடியது. இதுவே எனது அடுப்பங்கரையிலிருந்து அழகுக்கலை என்கிற கான்செப்ட்டுக்கு உருவாக காரணம் எனலாம். இந்த நல்லதொரு ஐடியாவினால் நிறைய வாடிக்கையாளர்கள் எனக்கு கிடைத்தனர் என்றால் அது மிகையில்லை. அந்த வாடிக்கையாளர்களை இணைத்து புதிய வாட்சாப் குரூப் ஒன்றினை உருவாக்கினேன்.
“பெய்ட் வாட்சப் குரூப்’’ அமைக்கும் எண்ணம் உதித்தது எப்படி?
கொரோனா காலகட்டத்தில் என் பார்லரை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது என் வாடிக்கையாளர்கள் பலர் ஸ்கின்கேர் மற்றும் ஹேர்கேர் சம்பந்தமான பல பிரச்னைகளை என்னிடம் போனில் கேட்டு வந்தனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகச் சொல்லி வந்ததை ஒரு குரூப்பாக அமைத்து சொன்னால் என்ன என்கிற எண்ணம் எழுந்தது அப்போது தோன்றியது தான் இந்த பெய்ட் வாட்சப் க்ரூப் கான்சப்ட். இதில் பணம் கட்டி பலர் உறுப்பினர்களாக சேர்ந்து வந்தனர். அவர்களின் சந்தேகங்களை வாட்சாப் மூலம் விளக்கி வந்தேன். அதில் பலன் பெற்ற பலரின் வாய்மொழி விளம்பரங்களால் நாளடைவில் எனது வாடிக்கையாளர் வட்டம் விரிவடைந்தது. தற்போது வெளிநாடுகளில் வசிப்போர் கூட பலர் இதில் உறுப்பினர்களாகி பலனடைந்து வருகின்றனர். இலவசமாக அளித்தால் அதற்கு மதிப்பில்லை. இந்த வாட்சாப் குரூப்பில் பணம் கட்டி உறுப்பினர்களாவோர் நான் சொல்லும் விஷயங்களை மிகவும் சிரத்தையுடன் பாலோ செய்து அதிக பலன்களை பெற்று வருகின்றனர். எனது வாடிக்கையாளரின் உடல்நலத்தினை வயதினைக் கருத்தில் கொண்டே அவர்களுக்கான ஆலோசனைகளை தனிப்பட்ட முறையில் வழங்கி வருகிறேன். அவர்களது சருமத்தின் தன்மை , கேசத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப பராமரிப்பு ஆலோசனைகளை வழங்குவதே இதன் தனிச்சிறப்பு. அழகு குறித்த பல தகவல்கள் பல்வேறு தளங்களில் கொட்டிக் கிடந்தாலும் அவையெல்லாம் அவரவர் உடல்நலனுக்கேற்றதா என்பது பலருக்கும் தெரியாது.
அரோமா ஆயில்கள் குறித்து…
தற்போது அரோமா ஆயில்கள் குறித்து பலரிடையே நிறைய விழிப்புணர்வு வந்து விட்டது. ஆனால் நான் படித்த காலத்தில் அதாவது 25 ஆண்டுகளுக்கு முன்பு அரோமா தெரபிஸ்ட்டுகள் மட்டுமே அரோமா ஆயிலை கையாள தெரிந்தவர்களாக இருந்தனர். எந்த அரோமா ஆயிலை எதனோடு சேர்க்க வேண்டும் என்கிற நோட்கள் மிகவும் இன்றியமையாதது. அரோமா ஆயில்களை எப்போதும் தனியாக பயன்படுத்தக் கூடாது. அதனோடு ஏதாவது பேஸ் ஆயில்களை சேர்த்தே பயன்படுத்த வேண்டும். தற்போது பல புராடக்ட்களில் அரோமா ஆயில்கள் சேர்த்து நமக்குக் கிடைக்கிறது. தனியாகவும் வாங்கிப் பயன்படுத்த தொடங்கி வருகின்றனர் பலர். அரோமா ஆயில்களுக்கென்று பல நல்ல பலன்கள் உள்ளது.
பொதுவாக என்ன அரோமா ஆயில்களை பயன்படுத்தலாம்?
லாவண்டர் ஆயில் பல வகையிலும் பயன்படக்கூடியது. தூக்கம் வராமல் தவிப்பவர்கள் , அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம். இரண்டு சொட்டு லாவண்டர் ஆயிலை குளிக்கும் நீரில் கலந்து பயன்படுத்தினால் உடல் முழுவதும் ரிலாக்ஸாக இருக்கும். அதே போன்று தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து இரு சொட்டு லாவண்டர் ஆயிலை கலந்து தலையில் மசாஜ் செய்து கொள்வதும் நல்ல பலனைத் தரும்.அதே போன்று டீட்ரி எண்ணெய் சரும பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த ஆயில் நன்றாக பயன்படும். நாம் சருமத்திற்கு பேக்குகள் போடும்போது இந்த ஆயிலை கலந்து பயன்படுத்தலாம். பொடுகுத் தொல்லை உடையவர்கள் தங்கள் பயன்படுத்தும் ஷாம்புவுடன் டீட்ரி ஆயிலை கலந்து பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். ரோஸ்மேரி ஆயில் கேசப்பராமரிப்புக்கு ரொம்பவும் பயனுள்ளது. தேங்காய் எண்ணெயில் ஆறு சொட்டுக்கள் ரோஸ்மேரி ஆயில் சேர்த்து தலையில் மசாஜ் செய்து ஹேர்வாஷ் செய்யலாம்.
மெனோபாஸ் பிரச்னைக்கான பராமரிப்புகள் என்ன?
பொதுவாகவே மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்களுக்கு சருமம் மற்றும் கேசபாதிப்புகள் அதிகம் இருக்கும். ஹார்மோன் இம்பேலன்ஸ் பிரச்னைகளால் இந்த பாதிப்புகள் அதிகமாக காணப்படும். அந்த நேரத்தில் முகச்சுருக்கங்கள், முடி உதிர்தல், முன்நெற்றி வழுக்கை போன்ற பல பிரச்னைகள் உண்டாகும். அவர்களுக்கான ஸ்பெஷல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அதனை பயன்படுத்த பரிந்துரை செய்கிறேன். அதன் மூலம் பலனடைந்த பெண்கள் எண்ணிக்கையும் அதிகம்.
கேசப் பராமரிப்பு குறித்து….
அடிக்கடி தலையை வாஷ் செய்வது அவசியம். தலையில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் இருமுறை பெரிய பற்கள் கொண்ட சீப்பால் தலை சீவினால் மண்டையில் இரத்த ஓட்டம் சீராகும். அதே போன்று தலையில் எண்ணெய் தடவி பத்து நிமிடம் ஊறவைத்து பின்னர் ஷாம்பு போட்டு தலையை அலசலாம்.
பெண்களுக்கு அழகுக்கலை குறித்த புரிதல்கள் இருக்கிறதா?
பெண்களுக்கு அழகுக்கலை குறித்த புரிதல்கள் ஓரளவு இருந்தாலும் தங்கள் குடும்ப நலனுக்கு பிறகு தான் தங்களை பராமரிக்கும் எண்ணமே வருகிறது. ஒவ்வொரு பெண்ணுக்குமே செல்ப் கேர் என்பது மிகவும் முக்கியம்.. அதே போல் ‘மீ டைம்’ எனப்படும் தனக்கான நேரத்தை தினமும் ஒதுக்க வேண்டியதும் ரொம்ப அவசியம். தங்களது கேசம் மற்றும் சருமத்தை பராமரிப்பது அவர்களுக்கு அழகோடு ஆரோக்கியத்தையும் தன்னம்பிக்கையினையும் பெற்றுத் தரும். அழகாக இருக்கிறோம் என்பதே மிகப்பெரிய தன்னம்பிக்கை தானே. பெண்கள் எந்த வயதிலும் தங்களை பராமரித்து கொள்வதற்கான நேரத்தை ஒதுக்கி தங்களை அழகுப்படுத்திக் கொள்வது அவர்களுடைய செல்ப் கான்பிடன்ஸை பெரிதும் ஏற்படுத்தும். பொதுவாக பெண்களுக்கு உள் ஆரோக்கியம் சரியாக இருந்தால் தான் சருமம் மற்றும் கேசமும் ஆரோக்கியமாக இருக்கும் . அதற்காக பெண்கள் தங்களை நேரம் ஒதுக்கி கவனித்து கொண்டாலே போதும் என்கிறார் நிர்மலா.
– தனுஜா ஜெயராமன்.