தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சுடுகாட்டிற்கான இடத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இரு புறமும் கயிற்றை கட்டி கிராமமக்கள் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது ராமகிருஷ்ணாபுரம் ஆயிரக்கணக்கானோர் வசிக்கும் இந்த கிராமத்தில் சுடுகாடு இருந்த பகுதியில் நூலகம், குப்பைக்கிடங்கு, உரக்கிடங்கு, கிராம சேவை மையம் உள்ளிட்ட அரசு கட்டடங்கள் கட்டப்பட்டன இதனால் சுடுகாட்டிற்கான இடம் மிகவும் சுருங்கிவிட்டது.
இதனால் போதுமான இடம் ஒதுக்கித்தருமாறு அப்பகுதிமக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். இந்நிலையில் சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் புதிதாக பேவர்பிளாக் சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து சுமார் 30அடி அகலத்தில் விசாலமான சாலை அமைக்கும் பணிகளை தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பணியை நிறுத்துமாறு அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இருபுறமும் கயிற்றை கட்டி பணியை செய்யவிடாமல் தடுத்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.