Monday, May 27, 2024
Home » பாஜ ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனுமில்லை மோடியால் பலனடைந்த ஒரே நபர் அதானி மட்டுமே: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்

பாஜ ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனுமில்லை மோடியால் பலனடைந்த ஒரே நபர் அதானி மட்டுமே: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்

by Ranjith

சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து சேலம் குரங்குச்சாவடி, இடைப்பாடி பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியதாவது: உதயசூரியனுக்கு நீங்கள் போடும் ஓட்டு, பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு. எதிரணிகள் பிரிந்து நிற்கும் இந்த சூழலில் குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளரை நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும். மோடியை பொறுத்தவரை நிறைய வடை சுடுவார்.

அதை அவரே சாப்பிட்டு விடுவார். அவருக்கு துணையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. தமிழக அரசியல் வரலாற்றிலும், இந்திய அரசியல் வரலாற்றிலும் மட்டுமல்ல. உலக வரலாற்றிலேயே சேருக்கு அடியில் தவழ்ந்து சென்று சசிகலாவின் காலில் அவர் விழுந்த காட்சியை அவரே மறந்தாலும், நானே மறந்தாலும் நீங்கள் மறக்க மாட்டீர்கள். ஏனென்றால் அவர் செய்த துரோகம் அப்படி.
இப்ேபாது மூன்றாம் நபரின் காலிலா விழுந்தேன் என்று கேட்கிறார். அப்படி என்றால் மீண்டும் சசிகலாவின் காலில் விழும் தைரியம் எடப்பாடிக்கு உள்ளதா? அப்படி விழுந்தால் செய்த துரோகத்திற்கு பதிலடி கிடைக்கும்.

உதயநிதி ஒரே மாதிரி பேசுகிறார் என்று எடப்பாடி சொல்கிறார். எனக்கு இருப்பது ஒரே வாய். ஒரே நாக்கு. அவருக்கு இருப்பது ஒன்பது வாய். ஒன்பது நாக்கு. நான் எப்படி அவரைப் போல் நேரத்திற்கு தகுந்தவாறு பேச முடியும்? மோடியால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. அவரால் பயன்பெற்றவர் உலக பணக்காரர் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் அவரது நெருங்கிய நண்பர் அதானி மட்டும் தான். மின்சாரம், ரயில்வே என்று அனைத்து பொதுத்துறைகளையும் அதானிக்கு தாரை வார்த்துவிட்டார். எனவே இந்தநிலையை மாற்றி நமது மாநில உரிமைகளை மீட்டெடுக்க 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி ஜெயிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

* ‘ஆட்டுக்குட்டி பற்றி பேசுவதில்லை’
சேலம் குரங்குச்சாவடியில் உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சை நிறைவு செய்யும் முன்னர், தனது அடுத்தடுத்த பிரசார கூட்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் ஆட்டுக்குட்டி, ஆட்டுக்குட்டி என தொடர்ந்து பேச வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், `அவரை பற்றி பேசுறது இல்ல’ என தெரிவித்தார். இதைக் கேட்டு தொண்டர்கள் மீண்டும் ஆரவாரம் செய்தனர்.

You may also like

Leave a Comment

19 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi