சென்னை: ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்துள்ளார். ரமலான் நோன்பு தொடங்குவதற்கான பிறை கடந்த மார்ச் 11ம் தேதி காணப்பட்டது. தொடர்ந்து மார்ச் 12ம் தேதி முதல் நோன்பு தொடங்கியது. அதிகாலை முதல் மாலை 6.30 மணி வரை உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்தனர். மாலையில் பள்ளிவாசல்களில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி அருந்தி நோன்பை முடித்து வந்தனர். நேற்று இஸ்லாமியர்கள் 29வது நோன்பை கடைப்பிடித்தனர்.
இந்த நிலையில் ஷவ்வால் மாத பிறை நேற்று மாலை எங்கும் தென்படவில்லை. எனவே ரம்ஜான் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்கள், பொது இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர தயாராகி வருகிறார்கள்.