திருச்சி மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நேற்றுமுன்தினம் இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் யார் சிறந்த பணக்காரர்கள் என்ற போட்டியில் முதல் இடத்திற்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் இருக்கிறார்கள்.
இதில் அவர்கள் நடத்தும் அரசியல் தமிழக நலனுக்காக அல்ல. எடப்பாடியும், மோடியும் ஒன்று தான். பகலில் கணவன்-மனைவி போல் சண்டை போட்டு கொள்வார்கள். இரவில் ஒற்றுமையாக இருப்பது போல் செயல்பட்டு வருகிறார்கள். ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறார். பூமியில் கால் வைக்காமல் செயல்பட்டு அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி விட்டு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை கொடுக்க மறுக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.