சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சுற்றுச்சூழல், வனம் ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நாகப்பட்டினம் முகமது ஷாநவாஸ் (விசிக) பேசியதாவது: வக்பு வாரியத்தின் உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பை எனக்கு முதல்வர் அளித்திருக்கிறார். பல்லாயிரம் கோடிக்கான சொத்துகளை நிர்வகிக்கும் வக்பு வாரியத்துக்கு ஒரு கட்டமைப்பு இல்லை, அதிகாரிகள் இல்லை, பணியாளர்கள் இல்லை. மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறது. நாகூர் அனிபாவின் நூற்றாண்டு விழா தொடங்க இருக்கிறது. அவரது நூற்றாண்டை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
திராவிட இயக்கத்துக்காக அவர் கடைசி வரை வாழ்ந்தவர் என்பதால் அவருக்கு சிறப்பு செய்ய வேண்டும். ஏற்கனவே சமூகநீதி கண்காணிப்பு குழுவை அரசு நியமித்திருக்கிறது. அந்த கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும். 10 ஆண்டு கடந்து சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: தமிழகத்தில் 10, 15 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற பிரச்னையில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் அவர்களின் விடுதலை குறித்து பரிசீலிக்க முடியவில்லை. அவர்களுக்கு பரோல் கூட கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதுபோன்ற சட்ட சிக்கல் இருப்பதால்தான் விடுதலை செய்ய முடியவில்லை என்றார்.