சென்னை: காதுகேளாதவர்களுக்கான 8வது ஜூனியர் தேசிய விளையாட்டு போட்டியில் 95 பதக்கங்களை பெற்ற வீரர், வீராங்கனைகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மத்தியபிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை காதுகேளாதவர்களுக்கான 8வது ஜூனியர் தேசிய விளையாட்டு போட்டி மற்றும் 25வது சீனியர் தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டை சார்ந்த 150 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் பல்வேறு பிரிவு போட்டிகளில் 42 வீரர், வீராங்கனைகள் 51 தங்கம், 26 வெள்ளி மற்றும் 18 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் தரவரிசையில் தமிழ்நாடு 2ம் இடத்தை பெற்றது.
இந்த போட்டிகளில் பங்கேற்ற அணி வீரர்கள் பலர் மற்றும் நிர்வாகிகள் நேற்று தலைமை செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, பொது மேலாளர் (நிர்வாகம்) மணிகண்டன், தமிழ்நாடு காது கேளாதவர்கள் விளையாட்டு கழக செயலாளர் பொன்னுசாமி, நிர்வாகி ஷோபனா மற்றும் செய்கை மொழி பயிற்சியாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.