சென்னை: தொழில்களுக்கு ஏற்ப அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்த பட்டயப்படிப்புகள் அந்தந்த பகுதிகளில் உள்ள முக்கிய தொழில்களை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ப பட்டயப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், 403 சுயநிதி கல்லூரிகள், உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள 4 பாலிடெக்னிக் கல்லூரிகள் என மொத்தம் 495 கல்லூரிகள் உள்ளன. தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில், புதிய பாடத்திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரும் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிக அளவில் ஏற்படுத்தும் வகையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பாடத்திட்டம் மாற்றியமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகிறது. வரும் ஆண்டுகளில் 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகமாக செய்கிறோம். புதிய பாடத்திட்டம், ‘தொழிற்சாலைகளின் தேவைகளை அறிந்து, அதற்கு ஏற்ப வேலைவாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்துகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் தொழிற்சாலைகள் மேற்கொள்ளும் தொழில்களுக்கு ஏற்ப 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சென்னை மற்றும் கோவையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பட்டயப் படிப்பு, கரூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நெசவு தொழில்நுட்பம் எனும் புதிய பட்டயப்படிப்பும், கோயம்புத்தூரில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி பொறியியல் பட்டயப்படிப்பும். விழுப்புரத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் பட்டயப்படிப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பட்டயப்படிப்புகள் அந்தந்த பகுதிகளில் உள்ள முக்கிய தொழில்களை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ப பட்டயப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.