சென்னை: சட்டப்பேரவை 2023-24 ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலளித்து பேசியதாவது; நபிகள் நாயகம் பிறந்த நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். சீறாப்புராணம் இயற்றிய உமறுப் புலவருக்கு ஆகியோருக்கு மணிமண்டபம். கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பெயரில் அரசு மகிளிர் கலைக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.
உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. உலமா ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 1399 உலமாக்கள் ஓய்வூதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 பெற்று வருகிறார்கள்.
மாற்றுத்திறனாளி உலமாக்கள் ஓய்வூதியம் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட 50 வயது என்பதைத் தளர்த்தி 40 வயதாக நிர்ணயித்து 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தாலே ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றவர்களாவர். 2023- 24ம் நிதியாண்டிற்கு இணை மானியம் வழங்க ரூ.2.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி விடுவிக்க உத்தரவிட்டுள்ள முதல்வருக்கு நன்றி. கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள தகுதிவாய்ந்த நபர்களுக்கு ரூ.37000 வீதமும், கன்னியாஸ்திரிகளுக்கு ரூ. 60000 வீதமும் மானியம் வழங்கப்படுகிறது. நோன்பு திறக்க ரூ.25 கோடியில் 6500 மெட்ரிக் டன் அரிசியை பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களுக்கு விடுவிக்க முதல்வர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.