புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியது முதலே பா.ஜ.க தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக பாஜக செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து இருந்தது. அதில், மம்தா தலைமையிலான அரசு பல்வேறு விஷயங்களில் ஊழல் செய்துவிட்டதாக, அக்கட்சியை இழிவுப்படுத்தும் விதமாகவும் சொல்லப்பட்டு இருந்தது.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், கொடுக்கப்பட்ட புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் இது நேரடியாக தேர்தல் நடத்தை விதிகளை மீறும் நோக்கிலும், நியாயமான சுதந்திரமான தேர்தல் செயல்முறைக்கான உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது. எனவே மறு உத்தரவு வரும் வரை திரிணமூல் காங்கிரஸ் குறித்துத் அவதூறு விளம்பரங்களை வெளியிட பா.ஜ.கவுக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பாஜக தரப்பில் தொடரப்பட்ட மேல்றையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வு நீதிபதிகள், ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை விசாரிக்க முடியாது.
நாங்கள் அந்த விளம்பரங்களை பார்த்தோம். அது இழிவாக இருந்தது மட்டுமில்லாமல் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருக்கிறது. அதனால் இந்த விவகாரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. நீங்கள் வேண்டுமென்றால் (பாஜக) உங்களை சிறந்தவர் என்று கூறிக்கொள்ளலாம். ஆனால் உங்களது நடவடிக்கை வன்முறையை ஊக்குவிக்கும் விதமாக இருக்கிறது எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.