புதுடெல்லி: காஷ்மீரில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதாகவும், இதன் மூலம் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 5 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டமாக கடந்த 25ம் தேதி நிறைவடைந்தது.
இதில், ஸ்ரீநகர் தொகுதியில் 38.39 சதவீத வாக்குப்பதிவும், பாராமுல்லாவில் 59.1 சதவீதம், அனந்த்நக்-ரஜோரியில் 54.84 சதவீதம், உதம்பூரில் 68.27 சதவீதம் ஜம்முவில் 72.22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு சதவீதமாகும்.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அளித்துள்ள பேட்டியில், ‘‘மக்களவை தேர்தல் மூலம் ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் ஜனநாயகத்தின் மீது அதிகப்படியான நம்பிக்கை கொண்டிருப்பதை உறுதிபடுத்தி உள்ளனர். காஷ்மீரில் ஜனநாயக செயல்முறை தொடர்ந்து செழித்து வருவது, விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்தி ஊக்கமளித்துள்ளது. எனவே காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான செயல்முறையை தேர்தல் ஆணையம் மிக விரைவில் தொடங்கும்’’ என்றார்.