‘‘சில லட்சங்களுக்காக கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளை மறைக்கும் மருத்துவமனை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலான ஊரு கொண்ட மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், பிரபலமான மருத்துவமனை ஒன்று சமீபத்தில் எங்கள் மருத்துவமனை வார்டு படுக்கைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பியுள்ளது. இனி அனுமதிப்பதற்கு படுக்கைகள் இல்லை என்ற போர்டை வைத்துள்ளதாம். ஆனால், ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகம் திருப்பி அனுப்புகிறதாம். அதேநேரத்தில், வலுவான சிபாரிசு இருந்தால் அவர்களை மட்டும் உடனடியாக ரெண்டரை லட்சம் கட்டு, 5 லட்சம் கட்டு என்று பணத்தை கட்ட வைத்து உள்ளே அனுமதித்துக் கொள்கிறார்களாம். அவர்களிடம் நாள் ஒன்றுக்கு இவ்வளவு செலவாகும் என்று நேரடியாகவே சொல்கிறார்களாம். அதுக்கு சம்மதித்தால் மட்டுமே அட்மிஷனாம். அவர்கள் சொன்ன பணத்தை கட்டினால் மட்டும் மறைக்கப்பட்ட படுக்கை வந்துவிடுகிறது. இது மருத்துவமனைக்கு உள்ள நல்ல பெயரை கெடுத்துவிடும் என்று மருத்துவமனை ஊழியர்களே முணுமுணுக்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலை ஆட்சியில் கொரோனா முதல் அலையின்போது கடமையை செய்யாத சுகாதாரத் துறை இணை இயக்குனர் ஒருவர்… இப்போது கலங்கி வர்றாராமே… அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட இணை இயக்குனர் அலுவலகம் இருக்கு. கடந்த இலை ஆட்சியில் இருந்து இணை இயக்குநர் பணி காலியாகவே இருந்து வருகிறதாம். இலை ஆட்சியில் கடலோர மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிதாக உதயமான 38வது மாவட்டத்தில் உள்ள இணை இயக்குனரே கடலோர மாவட்டத்திற்கு கூடுதலாக பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாராம். கடந்த ஆட்சியின் போது கடலோர மாவட்டத்திற்கு அதிகம் வருவது இல்லையாம். அப்படியே பணிக்கு வந்தாலும் கடமைக்கு தான் வந்து செல்வாராம்… இதனால் முக்கிய பைல்கள் அப்படியே கிடப்பில் உள்ளது. 5 வருடமாக கடலோர மாவட்டத்தில் உள்ள பல சுகாதார நிலையங்கள் ஆய்வு செய்யப்படாமலே இருந்ததாம்.. கடந்த ஆட்சியில் கொரோனா ஊரடங்கின் போது கூட பொறுப்பான அதிகாரி இல்லாத காரணத்தால் அந்த துறையில் பணியாற்றக்கூடியவர்கள் கொரோனா தாக்கத்தின் போது பொறுப்பற்ற முறையில் பணியாற்றும் நிலை இருந்ததாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டும் இருந்தது… கடந்த 5 வருடமாக கடலோர மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட கூடுதல் பொறுப்பு பணியை கவனிக்காமல் இருந்து வந்த பொறுப்பு அதிகாரி தற்போது ஆட்சி மாற்றத்தால் என்ன செய்வது என தெரியாமல் கலக்கத்தில் இருந்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தங்களை ஜெயிக்க வைத்த இலைக்கட்சி நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் மாங்கனி கட்சி எம்எல்ஏக்கள் தனி ராஜாங்கம் நடத்தி வருவதாக சொல்றாங்களே.. எங்கே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி மாவட்டத்தில் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் இருப்பவர்கள் மாம்பழ கட்சி எம்எல்ஏக்கள் தானாம். இலையின் கூட்டணியில் நின்று ஜெயித்த இவர்கள், அந்த கட்சி நிர்வாகிகளோடு நெருக்கம் காட்டுவதை மெல்ல, மெல்ல தவிர்த்து வர்றாங்க. அதே நேரத்தில் மாஜி விவிஐபி ஊருக்கு வந்தால் நேரடியாக சென்று சந்திப்பதில் முதல் ஆளாக இருக்கிறார்களாம். இதே போல் அரசு சார்பில் நடக்கும் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டத்திலும் தவறாமல் பங்கேற்கிறார்களாம். இது இலைக்கட்சிகாரங்க மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியிருக்காம். இதை சில நிர்வாகிகள், மாஜியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்களாம். நம்ம கூட்டணியில் நின்னு ஜெயிச்சாங்க. ஆனாலும் அவங்க கவனம் பூராவும் இப்போது வேறு இடத்தில் இருக்கு என்று கோத்து விடுறாங்களாம். இதனால் உர்றாகும் மாங்கனி கட்சி எம்எல்ஏக்கள், நாங்க எப்படி நடக்கணும், எந்த கூட்டத்தில் கலந்துக்கணும்னு எங்க தலைவரு தான் சொல்லணும். எலக் ஷனோட கூட்டணியெல்லாம் முடிஞ்சி போச்சு. அதனால் தேவையில்லாத விவகாரங்களை எல்லாம் இலைக்கட்சிகாரங்க, கிளறக்கூடாது… என்று சொல்லி இலை நிர்வாகிகளை புறக்கணித்துவிட்டு மாங்கனி எம்எல்ஏக்கள் வேறு பாதையில் பயணிக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோயில் திருவிழாவுக்கு நிதி திரட்டும் கோயில் அதிகாரிகள் பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கன்னியாகுமரி பகவதி அம்மன்ேகாயிலில் வைகாசி திருவிழாவிற்காக பக்தர்களிடம் அன்பளிப்பாக பணமோ, பொருளோ கோயில் நிர்வாகம் சார்பில் வாங்கப்படுவது வழக்கம். இந்த வருடம் வைகாசி திருவிழா கொரோனா கட்டுப்பாட்டால் கோயிலில் உள்ள வழிபாடுகள் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கோயில் நிர்வாகம் கடந்த வருடம் திருவிழாவின்போது பணம் அன்பளிப்பு வழங்கிய பக்தர்களிடம் இந்த வருடம் திருவிழா நடத்துவதற்கு என பணம் பெற்று வருகிறார்களாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கல்வி நிறுவனம் நடத்தி வரும் ஒருவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் அன்பளிப்பாக பெற்றுள்ளனர். இதுபோல பல பக்தர்களிடமும் பணம் பெற்றுள்ளனர். கோயில் நிர்வாகிகள் பலரிடம் இருந்து பணம் பெற்று தங்களுக்குள் பங்கு போட்டுள்ளார்களாம். இந்த விஷயத்திலுமா அதிகாரிகள் கரன்சி பார்க்க வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்…’’ என்றார் விக்கியானந்தா….