Monday, May 27, 2024
Home » திருவெண்ணெய்நல்லூர் அருகே பயங்கரம்ஊஞ்சலில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே பயங்கரம்
ஊஞ்சலில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை

by Karthik Yash

திருவெண்ணெய்நல்லூர், ஏப். 6: திருவெண்ணெய்நல்லூர் அருகே வாலிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்த நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ராமு என்கிற ராமச்சந்திரன் (18). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மாட்டுவண்டியில் கரும்பு ஏற்றும் வேலை செய்து வந்தார். இவரது தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மேலும் மூத்த சகோதரி கடந்தாண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாயார் மணிமேகலை கரும்பு வெட்டும் தொழிலுக்காக ஈரோடு மாவட்டத்திற்கு சென்று விட்ட நிலையில் தனது பாட்டியுடன் கொத்தனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சுமார் 8.30 மணி அளவில் சரவணம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே, அதே ஊரை சேர்ந்த, அவரது நண்பர் பஞ்சவர்ணம் மகன் மோகன்ராஜ் (20), ராமலிங்கம் மகன் கந்தசாமி (18) ஆகியோர் குடிபோதையில் இவருடன் வம்பிழுத்து சண்டை போட்டுள்ளனர். அப்போது, முன்விரோதம் காரணமாக இன்று இரவுக்குள் உன்னை கொலை செய்துவிடுவேன் என மோகன்ராஜ் ராமச்சந்திரனை மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் சிறிதுநேரத்தில் ராமச்சந்திரன் அவரது வீட்டிற்கு சென்று அருகே இருந்த துணியால் கட்டிய ஊஞ்சலில் படுத்து தூங்கியுள்ளார். இரவு சுமார் 10 மணி அளவில் அங்கு வந்த மோகன்ராஜ் மற்றும் கந்தசாமி ஆகியோர் ஊஞ்சலில் உறங்கிக் கொண்டிருந்த ராமச்சந்திரனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது பாட்டி பவுனாம்பாள் தனது பேரன் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அதற்குள் மோகன்ராஜ், கந்தசாமி ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ராமச்சந்திரன், பெரியசெவலையை சேர்ந்த ராமலிங்கம் மகன் கந்தசாமி(18), திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் மோகன்ராஜ்(20) ஆகிய மூவரும் நண்பர்கள் ஆவர். கஞ்சா, வழிப்பறி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோகன்ராஜ் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் திருநாவலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்துள்ளார். தான் சிறைக்கு சென்று வந்த பிறகு ராமச்சந்திரன் தன்னுடன் சகஜமாக பேசி பழகவில்லை என்ற கோபமும் அவர் மீது இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தன்னைப் பற்றி ராமச்சந்திரன்தான் போலீசில் தகவல் கூறி தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்திருப்பாரோ என்ற சந்தேகமும் அவருக்கு இருந்ததால்தான் அவருடன் வம்பிழுத்து சண்டையிட்டுள்ளார். பின்னர் அன்றிரவு ராமச்சந்திரன் படுத்து தூங்கியபோது ேமாகன்ராஜ், கந்தசாமி, மடப்பட்டை சேர்ந்த வடிவழகன் மகன் கஜேந்திரன்(18), 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சேர்ந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதையடுத்து தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் ராமச்சந்திரனை கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கொத்தனூர் அருகே கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்ததையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து போலீசாரின் தேடுதலில் கஜேந்திரன்(18), சிறுவன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்இன்ஸ்பெக்டர்கள் பிரபு, மணிகண்டன்.தனிப்படை போலீசார் தலைமறைவாகியிருந்த முக்கிய கொலைகுற்றவாளிகளான மோகன்ராஜ், கந்தசாமியையும் அதிரடியாக கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi