துறையூர்: துறையூரில் தீயணைப்புத்துறை சார்பில் தகவல்பெறும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துறையூர் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக தகவல்பெறும் உரிமை சட்டம் 2005 குறித்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு துறையூர் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தகவல் பெறும் உரிமை சட்ட விழிப்புணர்வு தொடர்பான கட்டுரை போட்டிகள் மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பாலச்சந்தர் பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர்.