பேரையூர், அக். 10: பேரையூர் அருகே, பாலீஷ் செய்து தருவதாக கூறி நூதனமாக நகை மோசடி செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். பேரையூர் அருகேயுள்ள எம்.பெருமாள்பட்டியை சேர்ந்த கருப்பையா மனைவி ரூபினி(20). இவரது வீட்டிற்கு நேற்று வந்த வடமாநில வாலிபர் நகை பாலீஷ் செய்வதாக கூறியுள்ளார். ரூபினி அவரது ஐந்தரைப் பவுன் சங்கிலியை பாலீஷ் செய்து தருமாறு அவரிடம் கொடுத்துள்ளார். பாலீஷ் செய்த நபர் நகையை திருப்பி கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை வாங்கிகொண்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.
இதற்கிடையே, நகையின் எடை குறைந்திருப்பதை உணர்ந்த ரூபினி, அருகிலுள்ள மதிப்பனூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கத்தில் எடை போட்டு பார்த்துள்ளார். அப்போது ஒரு பவுன் குறைவாக இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரூபினி ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் வடமாநில வாலிபரை பிடித்து நாகையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை செய்தபோது, அவர் பீகார் மாநிலம் ரகுநாத்பூரை சேர்ந்த பிரமோத் யாதவ் மகன் சசிக்குமார்(20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.