கரூர்: கரூர் மாவட்டத்தில் வாகன சோதனைகள் மற்றும் இரவு ரோந்து பணிகளை கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கரூர் நகர பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸின், ஒட்டுநர்களின் உரிமம், ஆர்சி புக் ஆகியவை முறையாக வைத்துள்ளனரா என ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆவணங்கள் இல்லாத ஆம்புலன்ஸ்கள் பறிமுதல் செய்யவும் எஸ்பி உத்தரவிட்டார்.தொடர்ந்து, இரவு ரோந்து காவலர்களின் பணிகளை பார்வையிட்டு, பட்டா புத்தகங்களை நேரில் சென்று பார்வையிட்டார். ரோந்து பணியில் இருக்கும் அலுவலர்களுக்கு குற்ற தடுப்பு அறிவுரைகளையும் எஸ்பி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல் நிலைய ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும், நிலைய பாரா அலுவலில் இருக்கும் காவலர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும் அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து, நெடுஞ்சாலை ரோந்து பணியில் பணியாற்றும் ஹைவே வாகனங்களை தணிக்கை செய்து, நெடுஞ்சாலைகளில் குற்ற தடுப்பு மற்றும் வாகன விபத்து நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.