வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அருகே கார் டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியதில் கணவர் இறந்தார், மனைவியும், மகனும் காயமடைந்தனர். தோட்டக்குறிச்சி அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி(45). இவரது மனைவி ரேணுகாதேவி(40), மகன் ஹர்ஷிவ்(3). நேற்று முன்தினம் பொன்னுசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் கரூர் ஈஸ்வரன் கோயிலுக்கு காரில் சென்றார். அங்கு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார். சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மலையம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது காரின் டயர்எதிர்பாராமல் வெடித்தது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர்மீடியன் மீது ஏறி மறுபுறம் சென்று எதிரே வந்து கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பொன்னுசாமி, ஹர்ஷிவ் ஆகியோர் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பொன்னுசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஹர்ஷிவ் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லேசான காயமடைந்த ரேணுகாதேவி முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.