‘‘மாஜி அமைச்சரின் செயல்பாடு காரணமாக மூன்று மாவட்டங்களில் இலை கட்சி ஆட்டம் காணுதாமே… அந்த மாஜி அமைச்சர் அவ்வளவு ‘பவர் புல்லா’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஊரக வளர்ச்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக இலை கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதன் இரட்டையர்கள் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றார்களாம். வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை இணைத்து கூட்டம் நடத்தினாங்களாம். இந்த மாவட்டங்களில் தன் பவரை காட்ட வீரமான மாஜி அமைச்சர் தான் இந்த உள்ளடியில் இறங்கினாராம். இப்படி இருந்தால் கட்சி எப்டி உருப்படும் என்று உண்மையான இலை தொண்டர்கள் பேசிக்கினாங்க. ஆனால், குயின்பேட்டைக்கு மட்டும் தனியா கூட்டம் நடந்ததாம். காரணம், அந்த மாவட்ட செயலாளர் சேலம்காரருக்கு நெருக்கமாம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தோல்வி குறித்து ஆலோசனை கூட்டம் முடிந்து, வெளியே போன ராயப்பேட்டை இரட்டையர்களிடம் வேலூர் மாநகர இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கொடுத்த புகாரில் மாஜி அமைச்சர் வீரமானவரின் படத்தை போஸ்டரில் போடுவதில்லை என்று கூறியிருந்தாராம். மேலும் அந்த புகார் மனுவை வாங்கும்படி மாஜி அமைச்சர் வீரமானவர், ராயப்பேட்டை இரட்டையர்களிடம் கேட்டுக் கொண்டாராம். மாஜி அமைச்சரின் தீவிர விசுவாசியாக தன்னை காட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பாசறை செயலாளர் செயல்படுகிறாராம். மாவட்டம் பிரிந்தாலும் மாஜி அமைச்சரின் தலையீடு அதிகமாக உள்ளதால் கட்சியே கடலில் மூழ்கிய கப்பல் போல கவிழ்ந்து கிடக்குதாம். எந்தவித கட்சி பணிகளையும் செய்ய முடியவில்லையாம். எல்லா இடங்களிலும் முட்டுக்கட்டையாக வந்து நிற்பதால் வேலூர் மாவட்ட இலை நிர்வாகிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாங்க. இவரை கட்சியில் இருந்து ஓரங்கட்டினால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை இலை கட்சி மறந்துவிட வேண்டியதுதான் என்று பேசி வர்றாங்க…’’என்றார் விக்கியானந்தா. ‘‘பப்ளிசிட்டிக்கு மயங்கி… அரசு கட்டிடத்தை கோட்ைடவிட்ட நாகர்கோவில் அதிகாரியின் நையாண்டியை பார்த்து மக்கள் கைதட்டி சிரிக்கிறாங்களாமே… சொல்லேன் நானும் சிரிக்கிறேன்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையங்களில் தாய்ப்பால் ஊட்டும் அறைகள் பராமரிப்பின்றி இடிந்து கிடக்கிறது. பலமுறை மாநகராட்சி கவனத்துக்கு இந்த பிரச்னை சென்ற பின்னரும், இதை சீரமைக்க ஆணையர் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லையாம். இந்நிலையில், தற்போது மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பஸ் நிலையத்தில், தனியார் அமைப்பின் மூலம் தாய்ப்பால் ஊட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை ஆணையரே நேரடியாக போய் திறந்தும் வைத்தாராம். இதை தனியார் அமைப்பினர் கைதட்டி பாராட்டினாங்களாம். ஆனால் சமூக ஆர்வலர்களோ கறித்து கொட்டுகிறார்களாம். காரணத்தை விசாரித்தால் எல்லாம் பப்ளிசிட்டி பைத்தியம்தான் என்கின்றனர். அதாவது, நாகர்கோவில் பஸ்நிலையத்தில் மாநகராட்சியின் தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளது. பெயரளவுக்கு கூட அது ஏன், இப்படி கிடக்கிறது என்று ஆணையர் கேட்கவில்லையாம். ஏற்கனவே பஸ் நிலையத்தில் பயணிகள் இருக்க இடமில்லை. அரசு சார்பில் அமைக்கப்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறையே பராமரிப்பின்றி அப்படியே கிடக்க, தனியாருக்கு தாய்ப்பால் ஊட்டும் அறை அமைக்க இடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று பயணிகள் கேள்வி எழுப்புறாங்க. தனியார் நிதியில் பாலூட்டும் அறை அமைந்தாலும், இடம் மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம். இதற்கு பதிலாக பயணிகள் அமருவதற்கு புதிய இருக்கைகள், மின் விளக்கு வசதிகள் என ஆணையர் கேட்டு வாங்கி இருந்தால், பயன் உள்ளதாக இருந்திருக்கும் என்று பயணிகள் பேசிக் கொண்டார்கள்… பப்ளிசிட்டி மயக்கம் யாரை விட்டது அது அதிகாரியையும் தொற்றிக் கொண்டதாக சமூக ஆர்வலர்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘எதில் எதில்தான், கரன்சி பார்ப்பது என்ற விவஸ்தையே மாஜி அமைச்சருக்கு வேண்டப்பட்டவருக்கு இல்லை என்று பக்தர்கள் புலம்புவது என் காதுக்கு கேட்கிறது…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் புகழ்பெற்ற தென்திருப்பதி என அழைக்கப்படும் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் பெருமாள் பெயரை கொண்டவர் வேலைக்கு செல்லாமல் கோயில் வளாகமே கதி என கிடக்கிறாராம்.. கடந்த இலை ஆட்சியில் பினாமி பெயரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடையையும் ஏலம் எடுத்து நடத்தி வருகிறாராம்… மாஜி அமைச்சர் விஜயமானவர் தனக்கு நெருக்கமானவர் எனக்கூறி கோயில் அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு கோயிலிலேயே முகாமிட்டு தேவையானவற்றை சாதித்து வருகிறார். கோயிலுக்கு குடும்ப சகிதமாக வரும் வெளிமாநில பக்தர்களிடம் நைசாக பேசி அதிகாரிகள் துணையுடன் கோயில் கருவறை வரை அழைத்து செல்லும் பெருமாள் பெயரானவர் தரிசனம் முடிந்ததும் அவர்களிடம் இருந்து லம்பாக ஒரு தொகையை கறந்து கொள்வாராம்.. ஆட்சி மாறியும் இதே வேலையை தான் பெருமாள் பெயரானவர் தற்போது செய்து வருகிறார். அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் நிர்வாகம் செய்ய துறை அதிகாரிகள் இருக்கும் போதே விஐபிக்களின் பெயரை கூறி கோலோச்சி வரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் பெட்டிசன் கொடுக்க தயாராகி வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா….