சென்னை: .சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவர் மருது பாண்டியன் (வயது 30) சென்னை மருத்துவ கல்லூரியில் பொது அறுவையியல் பட்டமேற்படிப்பை மேற்கொண்டார். அதில் தேர்ச்சி பெற்ற பின், சென்னை மருத்துவக்கல்லூரியிலேயே பொது அறுவையியல் துறையில் உதவி அறுவை சிகிச்சை பேராசிரியராக இருந்தார். பின்னர், உயர் சிறப்பு அறுவையியல் படிப்புக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த மாதம் 27ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரியில், குடல்- இரைப்பை அறுவை சிகிச்சைத் துறையில், எம்.சி.எச் உயர் பட்டப் படிப்பு மாணவராகச் சேர்ந்தார். துறைக்குப் புதிய மாணவரானதால், வழக்கப்படி துறை சார்ந்த பணிகள் பற்றி அறிமுகம் ஆவதற்காக மருத்துவர் மருது பாண்டியன் ஒரு பார்வையாளராகத்தான் நடத்தப்பட்டார்.
இதனிடையில், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச் சாவு ஏற்பட்ட நபரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கல்லீரல், ஒரு கல்லீரல் செயலிழப்பு நோயாளிக்குப் பொருத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்படும் முறை குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், மருத்துவர் மருது பாண்டியன் தானாகவே அங்கு சென்று பார்வையாளராக இருந்தார். அறுவை சிகிச்சையிலோ, சிகிச்சைக்குப் பின் நோயாளியின் கண்காணிப்பிலோ, அவருக்கு எந்தவிதப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. அவரது அகால மரணம் சென்னை மருத்துவ கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினரை துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறப்பிற்கான காரணம் முறையான உறுப்புப் பரிசோதனை முடிந்த பின்னர் தான் தெரியவரும். பணிச் சுமையால் அவர் இறந்து விட்டார் என்ற கருத்தும், தொடர்ந்து 36 மணி நேரம் பணியில் இருந்தார் என்பதும் முற்றிலும் தவறானது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பிட்டுள்ளது.