திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மனைவிகளை கைமாற்றும் சம்பவம் தொடர்பாக கணவனுக்கு எதிராக போலீசில் புகார் செய்த இளம்பெண் வீட்டில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மணர்க்காடு பகுதியை சேர்ந்தவர் ஷினோ. இவரது மனைவி ஜூபி (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
கடந்த வருடம் ஜனவரி மாதம் ஜூபி கோட்டயம் கருகச்சால் போலீசில், மனைவிகளை கைமாற்றும் கப்பிள் மீட் அப் கேரளா’இணையதள குழுவில் உள்ள தன்னுடைய கணவன் ஷினோ சிலரது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், வேறு வழியின்றி அவரது மிரட்டலுக்கு பயந்து 9 பேருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஷினோ உள்பட ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், மணர்க்காட்டில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ஜூபி நேற்று காலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அவரை ஷினோ கொலை செய்து விட்டதாக போலீசில் ஜூபியின் தந்தை புகார் செய்தார்.