Tuesday, May 7, 2024
Home » மலேசியாவுக்கு சென்ற விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கியது

மலேசியாவுக்கு சென்ற விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கியது

by Karthik Yash

சென்னை: சவுதி அரேபியாவில் இருந்து மலேசியாவுக்கு 278 பயணிகளுடன் சென்ற ஏர் ஏசியா விமானத்தில், பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிற க்கப்பட்டது. சவுதி அரேபியா நாட்டில் உள்ள ஜெட்டா நகரில் இருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று முன்தினம் மாலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் 278 பயணிகளுடன், சென்னை வான்வெளியை கடந்து கொண்டு இருந்தபோது, இந்தோனேசியா நாட்டுச் சேர்ந்த பயணி, புஹாரி ஜிண்டோ (64) என்பவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதை அடுத்து விமான பணிப்பெண்கள், கேப்டனுக்கு அவசரமாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக கேப்டன், விமானத்தை ஏதாவது ஒரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கி, அந்தப் பயணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். அப்போது, சென்னை விமான நிலையம் அருகில் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து தலைமை விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு, ஒரு பயணிக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என கூறினார்.

உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தனர். அங்கிருந்து, விமானத்தை உடனடியாக சென்னையில் தரையிறங்க அனுமதிப்பதோடு, பயணிக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தையும் செய்யும்படியும் கூறினர். அதன்பின்பு, ஏர் ஏசியா விமானம் நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, பயணியை பரிசோதித்தனர்.

அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருப்பது தெரிய வந்தது. இதை அறிந்த சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், மனிதாபிமான அடிப்படையில், இந்தோனேசிய நாட்டு பயணிக்கு அவசரகால மருத்துவ விசா வழங்கினர். அதன்பின்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதோடு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi