சேலம்: வாழபாடி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வாழபாடி அருகே ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் ராசிபுரம் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த இளையராஜா (35) என்பவர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவர் இயக்கிய பேருந்தில் 60 பயணிகள் பயணம் செய்தனர். இளையராஜா பேருந்தை இயக்கி கொண்டிருந்த போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் நெஞ்சை பிடித்தவாறு சென்றுள்ளார். பின்னர் நிலைதடுமாறி பேருந்து தடுப்புசுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்நிலையில் கவிழ்ந்த பேருந்தில் இருந்த 60 பேரில் 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 60 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வாழப்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி மற்றும் வருவாய் துறையினரும், சேலம் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சுங்கச்சாவடி ஊழியர்கள் கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்டனர். அதில் காயமடைந்தவர்களை வாழப்பாடி அரசு மருத்துவமனையில் 9 பேரும், தனியார் மருத்துவமனையில் ஓட்டுநர் உள்பட்ட 2 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 5 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.