Saturday, May 18, 2024
Home » வள்ளலார் குறித்து சர்ச்சை கவர்னர் ஆர்.என்.ரவி மீது கடலூர் எஸ்பியிடம் புகார்: திட்டமிட்டு உள்நோக்கத்துடன் செய்ததாக குற்றச்சாட்டு

வள்ளலார் குறித்து சர்ச்சை கவர்னர் ஆர்.என்.ரவி மீது கடலூர் எஸ்பியிடம் புகார்: திட்டமிட்டு உள்நோக்கத்துடன் செய்ததாக குற்றச்சாட்டு

by Karthik Yash

கடலூர்: வள்ளலார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி மீது கடலூர் எஸ்.பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி மீது தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கடலூர் எஸ்பி ராஜாராமிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். அதில், ‘வள்ளலார் பிறந்த 200வது ஆண்டு விழாவை தமிழக அரசு மிகப்பெரிய அளவில் கொண்டாட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி வடலூரில் நடந்த வள்ளலார் 200வது ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசும்போது, ‘தான் ஒரு சனாதன தர்மத்தின் மாணவர் என்று சொன்னதுடன், சனாதனதர்மத்தின் 10 ஆயிரம் பாரம்பரியத்தின் உச்சநட்சத்திரம் வள்ளல் பெருமான்’ என பேசியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து கொண்டு திட்டமிட்டு உள்நோக்கத்துடன் வள்ளலாரை குறித்து தவறான தகவலை பதிவு செய்துள்ளார்.

வேதமதத்தின் மொழி சமஸ்கிருதம் என்பதை நன்கு தெரிந்து கொண்டே வேண்டுமென்றே சமத்துவம், சுயமரியாதை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வள்ளலார் வழி நிற்கும் சன்மார்க்க நெறியாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ஆர்எஸ்எஸ் நடைமுறைகளை பின்பற்றி வரும் ஆளுநர் திட்டமிட்டு இதை செய்துள்ளார் என திடமாக நம்புகின்றோம். ஏற்கனவே, சத்திய ஞானசபையில் காவிகொடி அணிவகுப்பை சத்திய ஞானசபை வளாகத்தில் நடத்த முயன்று, பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். ஆளுநர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி உள்ளார். எனவே அவரது செயல் தண்டனைக்குரிய குற்றச்செயலாகும். சன்மார்க்க பிரிவினருக்கு எதிரான கருத்துக்களை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் செய்துள்ள அவர் மீது சட்ட பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் உள்ளது.

You may also like

Leave a Comment

ten − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi