திருச்சி, மே 18: திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை பஞ்சவர்ண சுவாமி, காந்திமதி அம்பாள் பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் வீதியுலா நடைபெற்று வருகிறது. 4வது நாளான நேற்றுமுன்தினம் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் வீதியுலா நடந்தது. நேற்று ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது.
நாளை (19ம் தேதி) மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 7.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து 8 மணிக்கு விருந்தும் இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறுகிறது. 22ம் தேதி தீர்த்தவாரி, 24ம் தேதி பிச்சாடனார் கோலத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். இதற்கான ஏற்பா டுகளை கோயில் உதவி ஆணையர் சரவணன், செயல் அலுவலர் புனிதா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.