மோகனூர்: நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில், தீவன பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் வெள்ளி விழா நேற்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் கலந்து கொண்டு, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு தூணை திறந்து வைத்தார். மேலும், 3 நாள் நடைபெறும் கண்காட்சியை துவக்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் 7 கால்நடை மருத்துவக்கல்லூரிகள், 3 கால்நடை உணவுத்துறை சார்ந்த இதர மருத்துவக்கல்லூரிகள் செயல்படுகின்றன. நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை, கடந்த 12ம் தேதி இணைய வழியில் தொடங்கியது. வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இளநிலை கால்நடை மருத்துவப்படிப்புக்கு, கால்நடை உணவுத்துறை சார்ந்த படிப்புக்கு என மொத்தமாக 16,794 பேர் விண்ணப்பித்துள்ளனர். நடப்பாண்டில் புதிய மருத்துவ படிப்புகளோ, புதிய கல்லூரிகளோ தொடங்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.