ரிஷிகேஷ்: உத்தரகாண்டின் ரிஷிகேஷில் வசிக்கும் யோகி ஆதித்யநாத்தின் சகோதரியை, மோடியின் சகோதரி மற்றும் குடும்பத்தினர் சந்தித்த செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மூத்த சகோதரி சஷி தேவி, உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவரை பிரதமர் மோடியின் சகோதரி பசந்தி பென் ரிஷிகேஷில் சந்தித்தார். அவருடன் கணவர் ஹன்ஸ்முக் மற்றும் சில உறவினர்களும் உடனிருந்தனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே நடந்து சென்று சந்தித்தனர்.
முன்னதாக அவர்கள் புகழ்பெற்ற நீலகண்ட மகாதேவ் கோயில் மற்றும் புவனேஷ்வரி கோயிலுக்குச் சென்றனர். திரும்பி வரும் வழியில் சஷி தேவியின் கடைக்கு சென்று, தங்களுக்குள் அன்பை பகிர்ந்து கொண்டனர். நாட்டின் பிரபலமான இரு தலைவர்களின் சகோதரிகள் ஒன்றாக சந்தித்ததை வடமாநில ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மோடி, ஆதித்யநாத் ஆகிய இருவரின் குடும்ப பின்னணி குறித்து பெரும்பாலும் பொதுவெளியில் செய்திகள் அடிபடாமல் இருக்கும் நிலையில், தற்போது அவர்களின் சகோதரிகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து யோகி ஆதித்யநாத்தின் சகோதரி சஷி தேவி கூறுகையில், ‘புவனேஸ்வரி பிரசாத் பந்தர் என்ற பெயரில் கடையை நடத்தி வருகிறேன். கோயிலுக்கு தேவையான பூஜை பொருட்களை விற்று பிழைப்பை நடத்தி வருகிறோம். எனது கணவர் சிறிய தேநீர் கடை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோரக்பூருக்கு யோகி ஆதித்யநாத் வந்து சென்றார்’ என்றார்.