புதுடெல்லி: கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜுன் 18ம் தேதி கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இதன் காரணமாக இந்தியா, கனடா உறவில் நீண்ட விரிசல் ஏற்பட்டுள்ளது. நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டு மிக தீவிரமானவை. அது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் கனடாவின் விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், “இந்தியா, கனடா மோதல் காரணமாக இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவுகள் சிறிது காலம் மோசமாக பாதிக்கப்பட கூடும். இந்திய அதிகாரிகளுடனான உறவை அமெரிக்கா குறிப்பிட்ட காலத்துக்கு குறைத்து கொள்ள வேண்டும்” என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார் செட்டி தன் குழுவினரிடம் தெரிவித்ததாக அமெரிக்காவின் செய்தி ஊடகமான தி பொலிட்டிகோ செய்தி வௌியிட்டுள்ளது.
இதற்கு அமெரிக்க தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய, அமெரிக்க அரசு, மக்களிடையேயான உறவை மேலும் ஆழப்படுத்த எரிக் கார் செட்டி நாள்தோறும் உழைத்து வருகிறார். இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு முக்கியமானது” என்று தெரிவித்தார்.