Saturday, July 27, 2024
Home » நம்பிக்கையுடன் முயலுங்கள், வெற்றியை வசப்படுத்துங்கள்.

நம்பிக்கையுடன் முயலுங்கள், வெற்றியை வசப்படுத்துங்கள்.

by Porselvi

நகைச்சுவை திரைப்படங்கள் மூலம் உலகையே ஆட்டிப்படைத்த சார்லி சாப்ளின் பற்றி நாம் அறிவோம். உலக அரங்கில் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவைப் புரட்சி ஏற்படுத்தியவர் எனவும் சொல்லலாம்.அவர் ஒருமுறை தான் தயாரிக்கும் படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடத்திக் கொண்டிருந்தார். ஒரு இளைஞர் அவரிடம் நடிப்பதற்கான வாய்ப்பு கேட்டு வந்தார். சார்லி சாப்ளின் அந்த இளைஞரிடம் உனது திறமையை நிரூபிக்கக் கூடிய சான்று ஏதாவது இருக்கின்றதா? என்று கேட்டார்.இருக்கிறது என்ற அந்த இளைஞர் உள்ளூர் பிரமுகர்கள் சிலரிடம் வாங்கி வந்திருந்த நற்சான்றுக் கடிதங்களை அவரிடம் காண்பித்தார்.

சார்லி சாப்ளின் அவற்றை வாங்கிப் பார்த்துவிட்டு, ‘‘இவையெல்லாம் போதாது” என்று சொல்லி, அந்த இளைஞனை திருப்பி அனுப்பி விட்டார்.இரண்டு நாட்கள் சென்றன. அந்த இளைஞர் மறுபடியும் சார்லி சாப்ளினை காண வந்தார். பிரபல ஹாலிவுட் நடிகர் சிலரிடம் நற்சான்றுக் கடிதங்கள் வாங்கி வந்திருக்கிறேன் என்று சொல்லி அவற்றை சார்லி சாப்ளிடம் கொடுத்தார்.அந்தக் கடிதங்களை பார்வையிட்ட சார்லி சாப்ளின், இவற்றாலும் பயனேதும் இல்லை என்று சொன்னார். இளைஞர் அன்று திரும்பி போனாலும், மறுபடியும் சார்லி சாப்ளினைத் தேடி வந்து கொண்டே இருந்தார். தொடர்ந்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பெரிய பதவியில் இருப்போர் என்று மாறி மாறி நற்சான்றுக் கடிதங்களை வாங்கி வந்த வண்ணமிருந்தார். ஆனால் எந்த கடிதத்தையும் சார்லி சாப்ளின் மதிக்கவில்லை.

ஒரு நாள் அந்த இளைஞர் மிகவும் சோர்வும், எரிச்சலும் அடைந்தார். அவர் சார்லி சாப்ளினிடம் வேறு யாரிடம் நான் என் திறமை குறித்துச் சான்றுகள் வாங்கி வர வேண்டும். அதைப் பற்றி சற்று தெளிவாக சொல்லுங்கள் என்று கேட்டார்.சார்லி சாப்ளின் புன்னகையுடன், ‘‘இளைஞரே, உமக்கு நடிப்பதற்கு சந்தர்ப்பம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்.நடிப்புத் திறமை உனக்கு இருப்பதாக கூறுகின்றீர். உமக்கு நடிக்கத் தெரியும் என்று என்னிடம் நிரூபித்துக் காண்பிப்பது ஒன்றுதான் உண்மையான சான்று. இத்தனை பேருடைய சான்றுக் கடிதங்கள் மூலம் உன் நடிப்பாற்றலை நான் எப்படி விளங்கிக் கொள்ள முடியும் என்றார்.

‘‘இதை நீங்கள் என்னிடம் முன்பே சொல்லி இருக்கலாமே”என்று ஆத்திரம் பொங்கக் கேட்டார், அந்த இளைஞர்.நீங்கள் உண்மையில் நல்ல நடிகனாக இருந்தால், இத்தனை சான்றுக்கடிதங்களை தேடியிருக்க மாட்டீர்கள்.நேரடியாக என் முன்பு வந்து நடித்துக் காண்பித்து உங்கள் நடிப்பாற்றலை நிரூபித்துக்காட்ட முயற்சி செய்திருப்பீர்கள் என்றார் புன்னகை மாறாமல்.பலரிடம் சென்று, முயற்சிகள் பல செய்து நற்சான்றிதழ்களை வாங்கி வந்த இளைஞருக்கு,தன் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதையே, சார்லி சாப்ளின் அழகாக சுட்டிக் காட்டினார்.இதை உணர்ந்த இளைஞன் தன் தவறுக்கு வருந்தினார்.நம்பிக்கையே உலக மாந்தர்களின் வாழ்வின் அடிப்படையாகும்.நம்பிக்கை அற்ற அல்லது நம்பிக்கை குறைந்த மனிதர்கள் எந்தத்துறையில் ஈடுபட்டாலும் தொடர்ந்து முன்னேற்றம் காண மாட்டார்கள். குறையாத நிறைந்த நம்பிக்கையுடன் தன்னிடம் இருந்த திறமைகளை வெளிப்படுத்தி சாதித்து உயர்பதவியை அடைந்தவர்தான் தஸ்கீன் கான்.

யுபிஎஸ்சி (UPSC) தேர்வு மிகவும் கடினமான தேர்வாகத்தான் அனைவராலும் பார்க்கப்படுகிறது.எளிதில் தேர்ச்சி பெற முடியாத தேர்வு என்பது எல்லோருக்கும் தெரியும்.மேலும் அறிவுபூர்வமாக சவாலான தேர்வாகத்தான் கருதப்படுகிறது. யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பொறியாளர்கள், மருத்துவர்கள், சமூகவியல், உளவியல், மற்றும் வரலாற்றியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்ற புத்திசாலி மாணவர்கள் மட்டுமே தயாராக முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் பொழுதுபோக்கு சார்ந்த துறையில் மாடலாக இருந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார் சாதனை மங்கை தஸ்கீன் கான்.

இவரின் வெற்றி ஆச்சரியப்படுத்தும் வகையில் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. மேலும் எந்தத் துறையை சார்ந்தவர்களும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார் தஸ்கீன் கான். குழந்தைப் பருவத்திலிருந்தே புத்திசாலித்தனமானவர் தஸ்கீன்.பல்வேறு திறமைகளைக் கொண்ட பெண்ணாகத் திகழ்ந்தார்.அழகி போட்டிகளில் கலந்து கொண்டு ‘மிஸ் டேராடூன்’ மற்றும் ‘மிஸ் உத்தராகண்ட்’ ஆகிய பட்டங்களை வென்றவர். அவர் ஒரு வெற்றிகரமான மாடலாகவும் இருந்து வந்தார்.வசீகரமான புத்திசாலி பெண்ணான தஸ்கீனுக்கு சமூக ஊடகங்களில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.தஸ்கீன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி கூடைப்பந்து சாம்பியனாகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பில் சராசரி மாணவியாக இருந்த தஸ்கீன் கல்லூரி படிப்பை உயர்கல்வி நிறுவனமான NITயில் படிக்க விரும்பி விண்ணப்பித்தார். NIT யில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.ஆனால், அவரது பெற்றோரால் கட்டணம் செலுத்த முடியாததால் மதிப்புமிக்க அந்த கல்வி நிறுவனத்தில் சேர முடியவில்லை. இருந்தபோதும் கல்லூரி படிப்பில் தனக்கு கிடைத்த படிப்பை விரும்பி படித்தார்.அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பட்டங்களை பெற்றாலும், யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டு அது லட்சியமாகவும் மாறியது.மாடலாக இருந்து கொண்டே UPSC தேர்வுக்கு தன்னை தயார்படுத்துவதில் முனைப்புக் காட்டினார்.
இருப்பினும், அவ்வளவு எளிதாக அவரால் யுபிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை, மூன்று முறை தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.ஆனாலும், தஸ்கீன் மனம் தளரவில்லை.கடின உழைப்பு மற்றும் தீவிர பயிற்சியை மேற்கொண்டார்.எல்லாவற்றிற்கும் மேலாக விடாமுயற்சியுடன் செயல்பட்டார். இறுதியாக 2020ல் தனது நான்காவது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக தகுதி பெற்றார்.

தங்கள் மீது எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல், அவநம்பிக்கையுடன் இருக்கக்கூடிய இளம் பெண்களுக்கு தஸ்கீன் ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார். யுபிஎஸ்சி நேர்காணலில், தஸ்கீன்கான் கல்வியில் சராசரி மாணவி தான், ஆனால், விளையாட்டில் சிறந்து விளங்கியதாக வெளிப்படையாக நேர்மையுடன் ஒப்புக்கொண்டு தன்னடக்கத்தையும் வெளிப்படுத்தி சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகி வந்த தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் ஒருவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.அவர் யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சியைப் பற்றி எனக்கு தெரிவித்தார்.இதுவே எனது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது என்கிறார் தஸ்கீன் கான்.இவரைப் போலவே தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் உங்களுடைய அணுகுமுறையை அமைத்துக் கொண்டு செயல்படுங்கள். அத்துடன் உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை கூர்மையாக்கி கொண்டு,உங்கள் இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் முயலுங்கள்,வெற்றியை வசப்படுத்துங்கள்.

You may also like

Leave a Comment

seven − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi