க்ளே மற்றும் கண்ணாடிகள் இணைந்து உருவாக்கப்படும் வட இந்திய கைவினை வேலைப்பாடுகளுக்கு லிப்பான்கலை எனப் பெயர். வட இந்தியாவில் பிரபலமான இந்தக் கலை தற்போது தென்னிந்திய மக்களிடமும் பரவிக்கொண்டிருக்கிறது. இதனைக் கற்றுக்கொண்டதோடு நில்லாமல், இன்று ஆன்லைன், ஆஃப்லைன் என வருமானமும், மேலும் இதன் வீடியோக்களால் டிஜிட்டல் வருவாயுமாக ஈட்டி வருகிறார் நிதர்ஷினி கிருபானந்தன். ‘குஜராத்தில்தான் உடைகள், வீடுகள், அலங்காரப் பொருட்கள் என கண்ணாடிகளை அதிகம் பயன்படுத்துவதுண்டு. அதன் ஒரு அங்கமான கலையாக உருவானதே இந்த லிப்பான் கைவினைக் கலை. பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்களின் பொழுது போக்கு துவங்கி, அவர்களின் வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டும் தொழில் வரை என இந்த நிப்பான் கலை அங்கே கலாச்சாரத்துடன் கலந்த ஒன்று‘ லிப்பான் பூர்வீகம் குறித்து விவரித்த நிதர்ஷினி தொடர்ந்து தனது பூர்வீகம் குறித்தும் பேசத் துவங்கினார்.
‘எனக்கு சொந்த ஊர் தர்மபுரி, நான் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துகொண்டு இருந்தேன். குழந்தை குடும்பம் இதனால் தொடர்ந்து வேலையை தொடர முடியவில்லை. அம்மா என்கூடதான் இருக்காங்க அவங்க பெயர் ராஜேஸ்வரி, கணவர் பெயர் கிருபானந்தன், அவர் ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு இரண்டு மகள்கள் ஜான்வி மற்றும் லிஷிதா’ சுருக்கமாகத் தன்னைப் பற்றிப் பகிர்ந்தவர் தனது லிப்பான் விற்பனை மற்றும் வீடியோக்கள் குறித்துப் பேசத் துவங்கினார்.
ரொம்ப சின்ன வயதில் இருந்தே இந்த கைவினைப் பொருட்கள் மேலே ஆர்வம் உண்டு. சிறு வயதில் இருந்தே ஏதாவது நானே டிசைன் செய்து வீட்டில் அலங்காரத்திற்கு மாற்றி வைத்து விடுவேன். அப்போதெல்லாம் தெரியாது ஒரு காலத்தில் இதுதான் என்னுடைய கரியர் ஆகவே மாறப்போகிறது என்பது. எப்போதுமான சிலைகள் செய்யக்கூடிய அல்லது பொதுவாக பயன்படுத்தக்கூடிய கைவினைளே, எம்.டி.எஃப் போர்ட்(MDF – medium-density fibreboard) மற்றும் வட்ட, சதுர, முக்கோண, வடிவக் கண்ணாடிகள் கொண்டு நமக்கு விருப்பமான உருவங்களையோ வடிவங்களையோ டிசைன் செய்து 3டி பெயிண்டிங் போல் மாற்றி சுவர் அலங்காரங்கள், டேபிள் டெகரேஷன்கள், கதவு அலங்காரங்கள் எனச் செய்வதுதான் இந்த லிப்பான் ஆர்ட். வெறுமனே இந்த அலங்காரப் பொருட்களை செய்வதுடன் நிறுத்தாமல் அதனை வீடியோவாக எடுத்து யூடியூப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களிலும் ஷேர் செய்துவிடுவேன். நிதர்ஷினி ‘ஸ் பேஷன்’என்கிற அக்கவுண்டில் என்னுடைய வீடியோக்கள் பதிவிடுறேன்.
இதில்தான் முதலில் எனக்கு வருமானம் வரத் துவங்கியது. அங்கே தான் மாதம் ரூபாய் 10 ஆயிரம் துவங்கி இருபதாயிரம் வரையில் என நான் பதிவிடும் வீடியோக்களுக்கு ஏற்ப எனக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது. வாரத்திற்கு குறைந்தது ஐந்து முதல் ஆறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துவிடுவேன். ஆன்லைன் பொருத்தவரை நாம் எந்த அளவுக்கு வீடியோக்களை தடையில்லாமல் கொடுத்துகிட்டே இருக்குமோ அந்த அளவிற்கு நமக்கான ஃபாளோயர்கள் அதிகரிப்பாங்க ஆரம்பத்தில் 30 வியூஸ் வருவதற்கு படாத பாடு படுவது போல் இருக்கும். ஆனால் எந்த விதத்திலும் மனம் தளராமல் நீங்கள் உருவாக்கிய வீடியோவை பகிர்ந்து கொண்டே இருந்தால் ஏதாவது ஒரு வீடியோ உங்களையும் அறியாமல் வைரலாகும். அதுவரையிலும் அவசரப்படாமல் நமக்கான வேலையை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கணும். அதுதான் ஆன்லைன் பொறுத்தவரை சம்பாதிக்கிறதுக்கான முதல் படி’ என்னும் நிதர்ஷினி தனது லிப்பான் கலையில் வரும் வருமானம் குறித்தும் பேசத் துவங்கினார்
ரூபாய் 600க்கு கூட சமீபத்தில் ஒரு சுவர் டெகரேஷன் விற்பனையாச்சு. அப்படி நம்முடைய ஒர்க் நல்லா இருந்தா வாடிக்கையாளர்களே அதற்குரிய விலையை கொடுத்துவிடுவார்கள். ஆரம்பத்தில் நண்பர்கள் உறவினர்களுக்கு இப்படித்தான் நான் செய்து கொடுத்துட்டு இருந்தேன் அவங்க மூலமா நிறைய பரவ ஆரம்பிச்சு ஒரு கட்டத்தில் ஆன்லைன் மீடியத்துக்குள்ள வரும்போது அதன் மூலமாகவும் ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுடுச்சு. இந்த லிப்பான் ஆர்ட் சிறப்பம்சமே எத்தனை காலம் ஆனாலும் கலர் மங்கி போவதோ அல்லது தேய்ந்துபோவதோ நடக்காது. அடித்தளத்தில் அமைக்கப்படும் எம்.டி.எஃப் போர்டு பொறுத்துதான் நம்மளுடைய டெகரேஷன் எந்த அளவுக்கு பெரிது அப்படின்னு நாம தீர்மானிக்க முடியும். மேலும் பண்டிகைக் காலங்களில் அந்தந்த பண்டிகைக்கு ஏற்ப அது சார்ந்த டெக்கரேஷன் ஐட்டங்களையும் ஒரு வாரம் முன்பே நான் போஸ்ட் செய்து விடுவேன். இதனால் அதற்கான ஆர்டர்களும் கூட அதிகமாக வரத்துவங்கிடும். பொதுவா இதில் பயன்படுத்துகிற கண்ணாடிகள் தான் அதன் விலையை தீர்மானிக்கும் கண்ணாடியின் தரமும் அதன் எண்ணிக்கையும் அதிகரிக்க அதிகரிக்க விளையும் அதிகமாகும்‘ எங்கே எப்படி கத்துக்கலாம் மேலும் தொடர்ந்தால் நிதர்ஷினி.
யூடியூப் தளத்திலேயே நிறைய வீடியோக்கள், ஆன்லைன் வகுப்பு களும் கூட நடத்துறாங்க. நான் அப்படித்தான் கத்துக்கிட்டேன். நானும் கூடிய விரைவில் ஆன்லைன் மற்றும் நேரில் என ஒர்க் ஷாப் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் என்று இருக்கிறேன். இன்னும் இந்த நிப்பான் ஆர்ட் டெக்கரேஷன் ஐட்டங்கள் வட இந்தியாவில் ரூ. 50,000 வரையிலும் கூட விற்பனைக்கு இருக்கின்றன. அந்த அளவிற்கு என்னுடைய வேலையையும் அப்டேட் செய்துக்கணும். கைவினைக் கலை பொருத்தவரை பொறுமைதான் பிரதானம். மேலும் பலருக்கு இதன் மூலம் வருமானமே வேண்டாம் என்றால் கூட தங்கள் மனதை ஒருநிலைப்படுத்திக்கொள்ளவும், சிலருக்கு அலுவலகம், குடும்பம் என இருக்கும் அழுத்தத்தை குறைத்து மனநிலை அமைதிப் பெறவும்கூட ஏதேனும் ஒரு கலையை கற்றுக்கொள்வது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு இம்மாதிரியான ஏதேனும் ஒரு கலை அவர்களின் மனநிலையில் நல்ல மாற்றங்களை உண்டாக்கி, சில குழந்தைகளிடம் இருக்கும் ஹைபர் ஆக்டிவ் பிரச்னையைக் கூட சரி செய்யும் என்கிறார் நிதர்ஷினி
கிருபானந்தன்.
– ஷாலினி நியூட்டன்