திருச்சி: திருச்சி உறையூர், செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த ஐடி சோதனையில் ரூ.3000 கோடி பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பலான சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.30 லட்சத்துக்கு மேலான பத்திரப்பதிவுகளுக்கு பான் மற்றும் ஆதார் அட்டை இல்லாமலேயே பத்திரப்பதிவுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் செங்குன்றம் மற்றும் திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, முறையாக வருமானவரித்துறைக்கு கணக்கு காட்டாமல் சொத்துகளை சேர்த்து, வரி ஏய்ப்பு செய்த நபர்களின் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று 2வது நாளாக ஐடி ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது. இரண்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3000 கோடி பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.