திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தை சேர்ந்த தந்தை, மகனுக்கு கால்நடைகள் மூலம் பரவும் புளூசெல்லோசிஸ் என்ற நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆடு, மாடு பன்றி ஆகிய கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு புளூசெல்லோசிஸ் என்ற ஒரு வகை நோய் பரவுகிறது. கால்நடைகளில் காணப்படும் புளூசெல்லா என்ற பாக்டீரியா தான் இந்த நோய் பரவ காரணமாகும்.
வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, பன்றி ஆகியவற்றில் இருந்து தான் பெரும்பாலும் இந்த நோய் பரவும். மனிதர்கள் மூலம் இந்த நோய் பரவாது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும். உரிய நேரத்தில் கவனிக்காவிட்டால் மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்தநிலையில் திருவனந்தபுரம் வட்டப்பாறையை சேர்ந்த ஜோஸ், அவரது மகன் ஜோபி ஆகியோருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜோஸ் தன்னுடைய வீட்டில் பசுக்களை வளர்த்து வருகிறார். இவற்றில் இருந்து தான் இந்த நோய் 2 பேருக்கும் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் பசுக்களுக்கு பரிசோதனை நடத்தியபோது அவற்றுக்கு நோய் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஜோஸ் மற்றும் ஜோபி 2 பேரும் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.