வருசநாடு: தேங்காய்க்கு உரிய விளை கிடைக்காததால் மயிலாடும்பாறை பகுதியில் தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டம் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, வருசநாடு, மூலக்கடை, குமணன்தொழு உள்ளிட்ட கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் காய்கறிகள் மற்றும் தானியங்கள், தென்னை, வாழை போன்றவை சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. தென்னை மரங்களுக்கு கிணற்று பாசனம், ஆழ்துளை பாசனம் மூலம் விவசாயிகள் நீர்பாய்ச்சி வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் போன்றவை காரணமாக தென்னை சாகுபடி பரபரப்பு குறைந்து வருகிறது.
மேலும் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தென்னை மரங்களை வெட்டி அழித்துவிட்டு முருங்கை, காலிபிளவர், அவரை போன்ற விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். மேலும் ஒரு சில விவசாயிகள் தென்னை மரங்களை அழித்து விளை நிலத்தை பிளாட்டுகளாக மாற்றி வருகின்றனர். இதுகுறித்து மயிலாடும்பாறை விவசாயிகள் கூறுகையில், ‘தென்னை மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல் என அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால், அறுவடை காலங்களில் உரிய கிடைக்காததால் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், தென்னை மரங்களை அழித்து மாற்று விவசாயத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. தென்னை விவசாயிகளின் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.