திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருச்சூரில் 76 வயது முதியவரின் பாக்கெட்டில் கிடந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மாரோடிச்சால் என்ற பகுதியை சேர்ந்தவர் ஏலியாஸ் (76). நேற்று காலை 10 மணியளவில் இவர் டீ குடிப்பதற்காக அருகிலுள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். ஏலியாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.1000 மதிப்புள்ள ஒரு சாதாரண செல்போனை வாங்கியிருந்தார். அதை பாக்கெட்டில் அவர் வைத்திருந்தார்.
ஓட்டல் வாசலில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்த போது திடீரென அந்த செல்போன் லேசான சத்தத்துடன் வெடித்தது. உடனடியாக பாக்கெட்டில் இருந்தபடியே அந்த செல்போன் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த ஏலியாஸ் உடனடியாக தன்னுடைய கைகளால் தீயை அணைத்தார். தீயை உடனடியாக அணைத்ததால் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் ஓட்டல் வாசலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.