தருமபுரி: தருமபுரியில் 1000 விவசாயிகளின் கூட்டு முயற்சியால் உருவாகியுள்ள தமிழர் மரபு சந்தை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழர் மரபு சந்தை என தருமபுரி நகரில் பாரதி நகர் என்ற இடத்தில் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. 6 ஆண்டுகளாக நாடைபெற்று வரும் இந்த சந்தையில் ரசாயன நச்சு தெளிக்காத பாரம்பரிய நாட்டு ரக காய்கறிகள், தானியங்கள், அரியவகை மூலிகை வகைகள், சிறுதானிய வகைகள், கீரை வகைகள், பாரம்பரிய தானிய வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இது மட்டுமின்றி மர செக்குகளில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள், மலைத்தேன் வகைகளும் விவசாயிகளால் விற்கப்படுகிறது. அசைவ பிரியர்களுக்காக நாட்டு கோழி, கருங்கோழி, வான்கோழி, மீன் வகைகள் என இறைச்சி ரகங்களும் மரபு சந்தையில் விற்கப்படுகிறது. வீடுகளுக்கு தேவையான பொருட்கள் உட்பட அனைத்தும் ஒரே இடத்தில் மரபு மாறாமல் சந்தையில் கிடைப்பது அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.