Monday, May 27, 2024
Home » கணவர் இறந்த துக்கத்தில் 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

கணவர் இறந்த துக்கத்தில் 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

by Neethimaan

விருதுநகர்: கணவர் இறந்த துக்கத்தில் 3 பிள்ளைகளுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (36). விவசாயி. இவரது மனைவி பாண்டீஸ்வரி (32). இவர்களது மகள்கள் வைத்தீஸ்வரி (15), காளீஸ்வரி (11), மகன் விக்னேஸ்வரன் (4). இதில், வைத்தீஸ்வரி ஊர் அருகே உள்ள மகாராஜபுரம் பள்ளியில் பிளஸ் 1ம், காளீஸ்வரி கோட்டையூரிலுள்ள அரசு ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தனர். ஈஸ்வரனுக்கு சொந்தமான விவசாய தோட்டம் கோட்டையூரில் இருந்து துலுக்கபட்டி செல்லும் சாலையில் மரிக்களம்காத்தான் கண்மாய் அருகில் உள்ளது. ஈஸ்வரனின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருந்தது.

இந்தநிலையில், உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரன் நேற்றுமுன் தினம் பரிதாபமாக இறந்தார். கணவர் இறந்ததால் எப்படி குழந்தைகளை வளர்ப்பேன், நாங்கள் எப்படி வாழப்போகிறோம் என பாண்டீஸ்வரி அழுது புலம்பியுள்ளார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினர். குழந்தைகளோடு பாண்டீஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இந்நிலையில், இன்று காலை 2 மகள்கள், மகனோடு தனது தோட்டத்திற்கு பாண்டீஸ்வரி சென்றார். அங்கு கிணற்றில் மகள்கள், மகனோடு குதித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அவ்வழியாக தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் கிணற்றில் உடல் மிதப்பது குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்து கிடந்த பாண்டீஸ்வரி, அவரது மகள்கள் வைத்தீஸ்வரி, காளீஸ்வரி, விக்னேஸ்வரன் ஆகியோர் உடல்களை மீட்டனர். 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த துக்கத்தில் 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது வத்திராயிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

8 + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi