Monday, June 17, 2024
Home » ஜூன் 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்: அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

ஜூன் 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்: அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

by Ranjith

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜூன் 4ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், அதன்பிறகு பள்ளிகளை திறக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்:
பள்ளி வளாகத்தில் மாணவர்களின் முழு பாதுகாப்பிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் முழுப் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பள்ளித் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உடன் கலந்தாலோசித்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் அல்லது உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் ஏதேனும் இருந்தால், அத்தகைய கட்டிடங்களை மாணவர்கள் அணுகாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளின் உள்ளேயும் வெளியேயும் கைகளை சுத்தம் செய்ய ஏற்ற வகையில் போதுமான அளவில் சோப்பு அல்லது சோப்பு கரைசல் வைக்கப்பட வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து மின் சாதனங்கள் மற்றும் மின் சுவிட்சுகள் நல்ல முறையில் செயல்படுகிறதா என்பதை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மரங்களில் ஒடிந்த கிளைகள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கிளைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகள்:
பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் ஆய்வகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் ஆகியவற்றை நன்கு தூய்மைப்படுத்தப்பட வேண்டும். வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் பிற அறைகளிலுள்ள தளவாடப் பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

காலாவதியான ஆய்வகப் பொருட்களை முறையாக பதிவேட்டில் பதிவு செய்து நீக்கம் செய்ய வேண்டும். பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்; மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர்த் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அனைத்தையும் உள்ளே கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, தூய்மையாகவும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையிலும் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

சமையலறையை நன்கு சுத்தம் செய்து சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டு பயன்படுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற பொருட்கள் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்துதல் அவசியம். உரிய விதிகளின்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

five × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi