சென்னை: மின் அழுத்த குறைபாடு பிரச்னையை சமாளிக்க துணை மின் நிலையங்களில் கெபாசிட்டர் கருவி பொருத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட கோடை வெப்பம் அதிகரித்ததால், ஏசி, மின்விசிறி உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்து மின் தேவையும் அதிகரித்தன. இதனால் டிரான்ஸ்பார்மர்கள் மூலம் அதிக மின் விநியோகம் இருக்கும்போது, லோ-வோல்டேஜ் எனப்படும் மின் அழுத்தக் குறைபாடு ஏற்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்தேவை அதிகரிக்கும்போது, மின் அழுத்தக் குறைபாடும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சுங்குவார்சத்திரம், புளியந்தோப்பு, மணலி, அலமாதி, சோழிங்கநல்லுாரில் உள்ள துணை மின் நிலையங்களில், கெபாசிட்டர் கருவி பொருத்தப்பட உள்ளது. மேலும் மின் வழித்தடங்களில் மின் பளுவின் அளவை ஆராய்ந்து, கூடுதல் வழித்தடங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.