வருவாய்துறையை பொறுத்தவரை பட்டா மாற்றம் என்பது முக்கியமான பணியாகும். சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும்போதே, பட்டா மாற்றம் செய்யும் நடைமுறை அமலில் இருந்தாலும், அதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பலர் அதை செய்ய முன்வருவதில்லை. இதனால் பட்டா மாற்றம் செய்திட பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக வருவாய்துறைக்கு விண்ணப்பிக்கின்றனர். பட்டா மாற்றத்தில் ஒருவர் தன்னுடைய பட்டாவில் உள்ள முழு நிலத்தையும் ஒருவருக்கு விற்பனை செய்தால், அது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் எனவும், அந்த நிலத்தை பகுதி, பகுதியாக பிரித்து விற்பனை செய்தால் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்றும் அழைக்கப்படுகிறது.
வீட்டுமனை வாங்கிய பொதுமக்கள் உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்து விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். பத்திரப்பதிவு செய்யும் சொத்துக்களுக்கு தாசில்தார் அலுவலகத்தில் விரைந்து பட்டா வழங்காமல், பொதுமக்களை அலைக்கழிப்பதாக சில புகார்கள் வர தொடங்கின. கொரோனா காலத்திற்கு பின்னரே பட்டா மாறுதலில் மந்தகதி காணப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் பட்டா நிலங்களில் உட்பிரிவு செய்து, பெயர் மாற்றம் செய்யும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இதன் விளைவாக பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அதிகளவு தேங்க தொடங்கின. இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை 16 தினங்களுக்குள் வழங்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இனிமேல் இரண்டு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியதில்லை.
பட்டா மாறுதல் நடைமுறையை விரைவுப்படுத்தி கண்காணிக்க சிறப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி மாவட்ட மற்றும் தாலுகா அளவில் ஆன்லைன் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்களின் முன்னேற்றத்தை கண்காணிக்க துணை ஆட்சியர் அந்தஸ்தில் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. தாலுகாவிற்கு வெளியில் இருந்து துணை தாசில்தார் அல்லது உதவியாளர்கள் குழுவை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு துணை ஆட்சியர் நியமிக்கப்பட உள்ளார்.
துணை ஆட்சியர் தலைமையிலான குழுவினர் தாலுகாக்களில் மின்சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் வழங்குவதில் முன்னேற்றம் மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்வர். மேலும் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் 16 நாட்களுக்கு மேல் நிலுவையில் வைக்கப்படாமல், சரியான நேரத்தில் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்வர். பட்டா மாறுதல் விவகாரங்களில் முறைகேடுகள் மற்றும் தாமதங்களை தவிர்க்க வெளிதாலுகாக்களை சேர்ந்த அதிகாரிகளை இதில் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டா மாறுதல் தவிர்த்து, சாதி சான்றிதழ், இருப்பிடம், வருமானம், வாரிசு சான்றிதழ் 25 வகையான வருவாய்துறையின் சேவைகளும் இணைய வழியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஒருங்கிணைத்து வரும் நிலையில், இச்சான்றிதழ்கள் அனைத்துமே 16 தினங்களுக்குள் இனி வழங்கப்பட உள்ளன. சான்றிதழ்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை, பொதுமக்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் அனைத்து தரப்பும் மக்களும் எளிதில் பயன்பெறுவர்.