ஷாஜகான்பூர்: உத்தரபிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியாகினர். உத்தரகாண்ட் மாநிலம் தானக்பூரில் புகழ் பெற்ற பூர்ணகிரி நாதர் கோயில் அமைந்துள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த 45க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பூர்ணகிரி நாதர் கோயிலுக்கு ஒரு பேருந்தில் புறப்பட்டனர். இந்த பேருந்து ஷாஜகான்பூர் மாவட்டம் குர்தா பகுதியில் உள்ள சாலையோர உணவகத்தில் இரவுநேர உணவுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.
பேருந்தில் இருந்த சிலர் உணவகத்துக்கு சாப்பிட சென்று விட்ட நிலையில், சிலர் பேருந்திலேயே அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பேருந்தின் பின்புறமும் பயங்கரமாக மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.