சென்னை: சென்னை வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் இடங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் இன்று சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணா சாலை – டேம்ஸ் சாலை – ஜெனரல் பீட்டர்ஸ் சாலை சந்திப்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்படுவது தொடர்பாகவும், சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவை ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா, சுற்றுச்சுவர், பார்வையாளர் மாடம், பயிற்சி ஆடுகளம் மற்றும் விளையாட்டு அரங்கம் போன்ற வசதிகளுடன் மேம்படுத்துவது தொடர்பாகவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்காக அறிவித்த 34 அறிவிப்புகளில் இன்றோடு 34 (அனைத்து) இடங்களையும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளின்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், தேனாம்பேட்டை மண்டலக் குழுத்தலைவர் மதன் மோகன், சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ். ருத்ரமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.