சென்னை: தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒன்றிய அரசின் பங்களிப்புடன் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பி.ஆர்.நடராஜன் குழுவில் உள்ளனர்.
திருநாவுக்கரசர், திருமாவளவன், நவாஸ்கனி, ஆர்.எஸ்.பாரதி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் குழுவில் உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன் மவுலானா, செங்கோட்டையன் குழுவில் உள்ளனர். 100 நாள் வேலை திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், அனைவருக்கும் கல்வி திட்டம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஐல் ஜீவன் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.