Tuesday, May 21, 2024
Home » தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர் தாக்குதல் தொடர்பாக வைகோ எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்..!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர் தாக்குதல் தொடர்பாக வைகோ எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்..!!

by Lavanya

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர் தாக்குதல் தொடர்பாக வைகோ எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். இது குறித்து அறிக்கையில் கூறியதாவது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 5, 2023 அன்று ‘பூஜ்ய’ நேரத்தில், இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதை இந்திய ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 12.01.2024 அன்று வைகோ அவர்களுக்கு பதில் அளித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம்,

இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த உங்கள் கவலைகளை நான் முழுமையாகக் கவனத்தில் கொள்கிறேன். இந்திய அரசு, இந்திய மீனவர்களின் பாதுகாப்பு நலன் குறித்து அதிக அக்கறை எடுத்து வந்துள்ளது என்பதை உங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருகிறேன். பிரதமர் உள்ளிட்ட குழு, இந்திய மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து இலங்கை அரசுடன் உயர்மட்ட விவாதித்து இருக்கின்றது.

பேச்சுவார்த்தைகளில், இந்திய மீனவர்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டு, மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை அரசை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், எந்தச் சூழ்நிலையிலும் மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை உடனான கூட்டுப் பணிக்குழுவின் (JWG) தொடர் பேச்சுவார்த்தைகளில், கைப்பற்றப்படும் மீன்பிடி படகுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அடுத்த கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. ஜனவரி 9, 2024 நிலவரப்படி, 13 இந்திய மீனவர்கள் இலங்கை காவலில் உள்ளனர். இந்திய அரசின் தொடர் முயற்சியால், 227 இந்திய மீனவர்களையும், 14 மீன்பிடி படகுகளையும் கடந்த 2023 ஆம் ஆண்டில் மீட்டுள்ளோம். மீதமுள்ளவர்களையும் விடுவிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. கொழும்பில் உள்ள இந்திய தூதரக ஆணையரும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் சிறைக்காவலில் உள்ள இந்திய மீனவர்களை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இவ்வாறு இந்திய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

11 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi