நாட்றம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா(18). கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிஏ தமிழ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த போட்டோ கிராபர் சரண்ராஜ்(38), அக்கா மகளான ஜீவிதாவை கடந்த 4 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறையையொட்டி ஜீவிதா வீட்டில் இருந்துள்ளார். அப்போது சரண்ராஜ் அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ், கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஜீவிதா அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அந்த அறையில் இருந்த கடிததை போலீசார் கைப்பற்றினர். அதில், ”அன்புள்ள அக்கா, மாமா, அம்மா, அப்பா அவர்களுக்கு சரண்ராஜ் எழுதுவது, நானும் ஜீவிதாவும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் முடியவில்லை. அதனால் இந்த முடிவிற்கு வந்தோம். எங்களை மன்னித்து விடுங்கள் என்று எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.