உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே மல்லியங்கரணை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரோஹித் வாடாவூர் கிராமத்தை சேர்ந்தவர். இதே கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் தினசரி பள்ளிக்கு சென்று வர ஒழுகரை பகுதியை சேர்ந்த பாலாஜி (30) என்பவர், ஆட்டோவில் காலை – மாலை வேலைகளில் பள்ளிக்கு சென்று வருவர்.இந்நிலையில், நேற்று பள்ளி முடித்துவிட்டு 15 மாணவ-மாணவிகளை வீட்டிற்கு பாலாஜி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கடல்மங்கலம் கிராம ஏரிக்கரை அருகே சென்றபோது ஆட்டோவின் பக்கத்தில் அமர்ந்திருந்த ரோஹித் ஆட்டோவின் ஸ்டேரிங் திருப்பியதாக கூறப்படுகிறது. இதில், ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரோஹித் தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்தார். மேலும், ஆட்டோவில் சென்ற ஓட்டுநர் பாலாஜி உட்பட மாணவ-மாணவிகள் 4 பேர் சிறு காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்திரமேரூர் போலீசார், ரோஹித் மற்றும் காயமடைந்த அனைவரையும் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரோஹித் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மேலும், காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி உட்பட பள்ளி மாணவ – மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.