சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் நேற்று நடந்த லோக் அதாலத்தில் 80,655 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.421 கோடியே 70 லட்சத்து 99,986 பைசல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. இந்த லோக் அதாலத்தில் வாகன விபத்து இழப்பீடு, செக் மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்பநல வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
வழக்கு தொடர்வதற்கு முந்தைய தாவாக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லோக் அதாலத்தில் ஒரு வழக்கோ அல்லது சட்ட பிரச்னையோ முடித்துவைக்கப்பட்டால் அதன் மீது எந்த நிலையிலும் எந்த நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்ய முடியாது என்பதால் லோக் அதாலத்தின் முடிவே இறுதியானது. இந்த முறையால் தற்போது நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் லட்சக்கணக்கான நிலுவை வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாக சட்ட பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த வகையில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் தமிழ்நாடு முழுவதும் 434 இருக்கைகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.நேற்றைய லோக் அதாலத்தில் மொத்தம் 1,49,638 வழக்குகள் விசாணைக்கு எடுக்கப்பட்டன. இதில் 80,655 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.421 கோடியே 70 லட்சத்து 99,986 பைசல் செய்யப்பட்டது.