சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகி விட்டதால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என ஜாமின் மனு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தனர். தற்போது புழல் சிறையில் உள்ளார். 8 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை செந்தில் பாலாஜி முதல்வருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அந்த ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைத்தார். இதையெடுத்து செந்தில் பாலாஜி ராஜினாமா கடிதத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம்” அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகிவிட்டதால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும். அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது. வழக்கு தொடர்பான புலனாய்வு நிறைவடைந்துவிட்டதாகவும், அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்துவிட்டதாகவும் அமலாக்கத்துறை கூறிவிட்டது.