இஸ்லாமாபாத்: கிரீஸ் நாட்டில் படகு கவிழ்ந்ததில் 350 பாகிஸ்தானியர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிரீஸ் நாட்டு கடற்பகுதியில் கடந்த வாரம் 700 பேரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்தது. இதில் 12 பாகிஸ்தானியர் உள்பட 104 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 82 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கிரீஸ் நாட்டில் குடியேற சட்டவிரோதமாக சென்றது தெரியவந்தது. இதுபற்றிய விசாரணையில் 350 பாகிஸ்தானியர்கள் படகில் பயணம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 350 பாகிஸ்தானியரில் 12 பேரை தவிர மற்ற அனைவரும் பலியாகி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.