சென்னை: தாம்பரம் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள் அறியும் வகையில் அமைக்கப்பட்ட புதிய மின் சுவர்திரையினை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், “அனைத்து மாநகராட்சிகளிலும், முதற்கட்டமாக இதனை துவக்குவதை இலக்காக வைத்து செய்திதுறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. படிபடியாக அனைத்து நகரங்களிலும் துவக்கி, பட்டிதொட்டி எங்கும் மின்சுவர்திரை அமைக்கப்படும். இதன்மூலம், தமிழ்நாடு அரசு எவ்வாறு செயலாற்றி வருகிறது என்று மக்களுக்கு தெரியசெய்கிறது.
மேலும், அரசின் திட்டங்களை எவ்வாறு பெறவேண்டும், அதற்கு என்ன தகுதி உள்ளது என்று மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும், சமூக ஊடகங்கள் வாயிலாக அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் சென்றடைய செய்கிறது. அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை செயலாற்றி வருகிறது. அரசு என்ன தான் திட்டங்களை செயல்படுத்தினாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால் தான் அதனை சிறப்பாக செயல்படுத்த முடியும், சமூக அக்கறையுடன் பொதுமக்களும் இதில் ஈடுபடவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் எல்.சுப்ரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.