தூத்துக்குடி: தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பள தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3பேரை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி மகன் முனியசாமி (45). உப்பள தொழிலாளி. இவருக்கும் உடன் வேலைபார்க்கும் ஒரு பெண்ணிற்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கணவரை இழந்த அந்த பெண் இரு மகன்களுடன் வசித்து வந்தார். இதனால் முனியசாமிக்கும் அந்த பெண்ணின் மகன்களான சுதாகர் (26), சதீஷ் (24) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு முத்தையாபுரம் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை முள்ளக்காடு சாமிநகர் பகுதியில் முனியசாமி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அந்த பெண்ணின் மகன்களான சுதாகர், சதீஷ், மேலும் ஒருவர் சேர்ந்து வழிமறித்தனர். பின்னர் முனியசாமியை சரமாரியாக வெட்டி விட்டு 3பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் முனியசாமி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய சுதாகர், சதீஷ், மேலும் ஒருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையான முனியசாமிக்கு கஸ்தூரி என்ற மனைவியும், ராஜா, கருப்பசாமி என்ற மகன்களும் உள்ளனர்.