கொல்கத்தா: ரெய்டு நடத்தி எனது பிரசாரத்தை முடக்கும் சிபிஐ-யின் சோதனையை கட்டுப்படுத்துங்கள் என்று தேர்தல் கமிஷனுக்கு மாஜி எம்பி மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக திரிணாமுல் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ நேற்று முன்தினம் சோதனை நடத்தியது.
மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மொய்த்ரா, தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘நான் தேர்தலில் போட்டியிடுவது தெரிந்தும், வேண்டுமென்றே சிபிஐ நான்கு முறை சோதனை நடத்தும் முடிவினை எடுத்துள்ளது. எனது தேர்தல் பிரசாரங்களை தடுக்கும் நோக்கத்துடனும், சிபிஐ சோதனையை நடத்துகிறது.
சட்டவிரோதமாக சோதனை நடத்திய இடங்களில், எனது தேர்தல் பிரசார அலுவலகமும், எனது எம்பி அலுவலகமும் அடங்கும். சிபிஐ-யின் நடவடிக்கை எனது தேர்தல் பிரசார முயற்சிகளை முடக்கி, என்னை துன்புறுத்தும் வகையில் இருக்கிறது. எனவே சிபிஐ-யின் சோதனையை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் எழுதியுள்ளேன்’ என்றார்.